கஞ்சா விற்ற வாலிபர் கைது
காரைக்கால்: காரைக்காலில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால், கோட்டுச்சேரி பகுதியில் இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் கோட்டுச்சேரி சாராயக்கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது சந்தோகத்தின் பேரில், அங்கிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. விசாரணையில், அவர், கோட்டுச்சேரி, ராயன்பாளையம் பகுதியை சேர்ந்த குமார் மகன் சேதுமணி, 26, என்பதும், அவர், இளைஞர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள 445 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுக்குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, சேதுமணியை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.