தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்: வங்கதேசம் மீண்டும் தோல்வி
அபுதாபி: வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், 2-0 என தொடரை கைப்பற்றியது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி அபுதாபியில் நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஜத்ரன் (95), முகமது நபி (22) கைகொடுத்தனர். ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவரில் 190 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட் சாய்த்தார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தவ்ஹித் (23), சைப் ஹசன் (22), ஜாக்கர் அலி (18) ஆறுதல் தந்தனர். தன்ஜித் ஹசன் (0), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (7) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்ற, வங்கதேச அணி 28.3 ஓவரில் 109 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் சுழலில் அசத்திய ரஷித் கான் 5 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை இப்ராஹிம் ஜத்ரன் வென்றார்.