சவாலை சந்திக்க தயார் * கேப்டன் சுப்மன் கில் உறுதி
மும்பை: ''இங்கிலாந்து தொடரில் சவால்களை சந்திக்க தயாராக உள்ளேன்,'' என இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. இதற்கு முன் நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கூறியது: ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும். தற்போது, நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய, இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்குகிறது. அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர்' வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம். மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன். இது மிகப்பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென 'ஸ்டைல்' எதுவும் இல்லை. அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணியில் தங்களது இடம் பாதுகாப்பான என்பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர். வரும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம். அடுத்து 10 நாள் பயிற்சி முகாம் உள்ளது. பவுலிங்கில் 10 வீரர்கள் உள்ளனர். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாத போது, சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.என்னைப் பொறுத்தவரையில் சராசரிகளை (இங்கிலாந்தில் கில் சராசரி 14.66 ரன்) நம்புவது இல்லை. கேப்டனாக, மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன். இவ்வாறு சுப்மன் கில் கூறினார்.