ஸ்மிருதி மீண்டும் நம்பர்-1: ஐ.சி.சி., தரவரிசையில்
துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான பேட்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மீண்டும் முதலிடம் பிடித்தார்.ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 735 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து மீண்டும் 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். கடந்த 2019ல் முதன்முறையாக முதலிடத்தை கைப்பற்றிய ஸ்மிருதி, சமீபத்தில் நியூ சண்டிகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 63 பந்தில், 58 ரன் விளாசினார். இப்போட்டியில் அரைசதம் விளாசிய மற்ற இந்திய வீராங்கனைகளான பிரதிகா (499), ஹர்லீன் தியோல் (497) முறையே 42, 43வது இடத்துக்கு முன்னேறினர்.இங்கிலாந்தின் நாட் சிவர்-புருன்ட் (731 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.பவுலர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்னே ராணா (530 புள்ளி) 21வது இடத்தில் இருந்து 15வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (795) முதலிடத்தில் நீடிக்கிறார்.