உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / அகில் ஷியோரன் வெண்கலம்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்

அகில் ஷியோரன் வெண்கலம்: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில்

புதுடில்லி: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அகில் ஷியோரன் வெண்கலம் வென்றார்.டில்லியில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல் நடக்கிறது. ஆண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிசன்ஸ்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் செயின் சிங் (590.32 புள்ளி), அகில் ஷியோரன் (589.35) முறையே 4, 6வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தனர்.இதில் அசத்திய அகில் ஷியோரன், 452.6 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் செயின் சிங் (409.3 புள்ளி) 7வது இடம் பெற்றார்.உ.பி.,யை சேர்ந்த அகில் ஷியோரன், கடந்த ஆண்டு அஜர்பெய்ஜானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் 50 மீ., 'ரைபிள்-3பி' பிரிவில் ஒரு தங்கம் (அணிகள்), ஒரு வெண்கலம் (தனிநபர்) வென்றிருந்தார்.பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3பி' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஆஷி (587.30 புள்ளி), நிஷால் (585.30) முறையே 9, 10வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தனர்.ரிதம் ஏமாற்றம்: பெண்களுக்கான 25மீ., 'பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் (585.20 புள்ளி), ரிதம் சங்வான் (584.16) முறையே 6, 7வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் சிம்ரன்பிரீத் கவுர் 20 புள்ளிகளுடன் 6வது இடத்தை கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ரிதம் சங்வான், தலா 27 புள்ளிகளுடன் 3வது இடத்தை சீனாவின் சிக்சுவான் பெங்கிடம் பகிர்ந்து கொண்டார். பின், 'ஷூட் ஆப்' முறையில் ஏமாற்றிய ரிதம் சங்வான் 4வது இடம் பிடித்து வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.இத்தொடரில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை சோனம் (10 மீ., 'ஏர் ரைபிள்') தங்கம் வென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை