| ADDED : ஏப் 21, 2024 10:30 PM
சுங்ஜு: பாரிஸ் ஒலிம்பிக் படகு போட்டிக்கு இந்தியாவின் பால்ராஜ் பன்வார் தகுதி பெற்றார்.தென் கொரியாவில் உலக ஆசிய, ஓசியானியா ஒலிம்பிக், பாராலிம்பிக் படகு போட்டிக்கான தகுதிச் சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 'ஸ்கல்' பிரிவில் 2000 மீ., துாரம் கொண்ட இலக்கை 7 நிமிடம், 01.27 வினாடியில் கடந்த இந்தியாவின் பால்ராஜ் பன்வார் 3வது இடம் பிடித்தார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் படகு போட்டி வீரரானார். ஹரியானாவை சேர்ந்த இந்திய ராணுவ வீரரான இவர், கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டார்.ஆண்களுக்கான 'லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ்' பிரிவில் இந்தியாவின் உஜ்வால் குமார், அரவிந்த் சிங் ஜோடி 3வது இடம் பிடித்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தை கோட்டைவிட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அர்ஜுன் லால், அரவிந்த் சிங் ஜோடி 11வது இடம் பிடித்து ஏமாற்றியது.மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா கலப்பு இரட்டையர் 'ஸ்கல்ஸ்' பிரிவில் இந்தியாவின் அனிதா, நாராயணா ஜோடி இலக்கை 7 நிமிடம், 50.80 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்து பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.