குத்துச்சண்டை: காலிறுதியில் நிஹாத் * உலக சாம்பியன்ஷிப்பில் கலக்கல்
லிவர்பூல்: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் நிஹாத் ஜரீன். இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் நிஹாத் ஜரீன், ஜப்பானின் நிஷினகா யுனாவை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நிஹாத், 5-0 என்ற கணக்கில் ஒருமனதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறினார். கடந்த 2022, 2023ல் உலக சாம்பியன் ஆன நிஹாத், இன்னும் ஒரு வெற்றி பெறும் பட்சத்தில், உலக சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது பதக்கம் கைப்பற்றலாம். இந்தியாவின் சுமித் குண்டு (75 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற நரேந்தர் (90+ கிலோ), என மூவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினர். இந்திய வீராங்கனை நீரஜ் போகத் (65 கிலோ), 2-3 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் ஹிக்கேயிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.