உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக செஸ்: குகேஷ் அதிர்ச்சி

உலக செஸ்: குகேஷ் அதிர்ச்சி

சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்தியாவின் குகேஷ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நேற்று சிங்கப்பூரில் துவங்கியது. நடப்பு உலக சாம்பியன், உலகத் தரவரிசையில் 15வது இடத்திலுள்ள டிங் லிரென் 31, (சீனா), கேண்டிடேட்ஸ் தொடரில் சாதித்த, 'நம்பர்-5' ஆக உள்ள இந்தியாவின் இளம் வீரர் குகேஷ் 17, பலப்பரீட்சை நடத்துகின்றனர். நீண்ட நேரம் விளையாடப்படும் 'கிளாசிக்கல்' முறையில் மொத்தம் 14 சுற்று நடக்கும். இதன் படி முதல் 120 நிமிடத்தில் 40 நகர்த்தல் செய்ய வேண்டும். இத்தொடரில் முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. நேற்று முதல் சுற்று நடந்தது. கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு, நெருக்கடி தந்தார். இதை டிங் லிரென் சமாளிக்க, முதல் 12 நகர்த்தல் வரை இருவரும் சம நிலையில் இருந்தனர். 22வது நகர்த்தலில் குகேஷ் செய்த தவறு காரணமாக போட்டியில் பின்தங்கினார். வாய்ப்பை பயன்படுத்திய டிங் லிரென், அடுத்தடுத்து சிறப்பாக செயல்பட்டார். இதனால் குகேஷ் மீள முடியாத சூழலுக்கு சென்றார். வேறு வழியில்லாத நிலையில், போட்டியின் 42வது நகர்த்தலில் குகேஷ், தோல்வியை ஏற்றுக் கொண்டார். முதல் சுற்று முடிவில் குகேஷ் 0-1.0 என பின் தங்கினார். இன்று நடக்கும் போட்டியில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !