இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்: கோ-கோ உலக கோப்பையில்
புதுடில்லி: 'கோ-கோ' உலக கோப்பை லீக் போட்டியில் (ஜன. 13) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.டில்லியில், வரும் ஜன 13-19ல் 'கோ-கோ' உலக கோப்பை முதல் சீசன் நடக்க உள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பிரேசில், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்தோனேஷியா சார்பில் பெண்கள் அணி மட்டும் பங்கேற்கிறது.இத்தொடருக்கான அட்டவணை வெளியானது. லீக், 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜன. 13ல் துவக்க விழா நடக்கும். அன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் ஆண்கள் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று நான்கு நாட்கள் (ஜன. 13-16) நடக்கும். அதன்பின் காலிறுதி (ஜன. 17), அரையிறுதி (ஜன. 18), பைனல் (ஜன. 19) நடத்தப்படும்.இத்தொடருக்கான விளம்பர துாதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.