நீரஜ் சோப்ரா இலக்கு என்ன...
ஆஸ்ட்ரவா: '' டோக்கியோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்படுவது தான் இலக்கு,'' என நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்றவர் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 27. சமீபத்திய பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் முதலிடம் பிடித்தார். இவர் கூறியது:ஈட்டி எறியும் முறையில் சற்று முன்னேற்றம் அடைந்ததால், தோகா போட்டியில் 90 மீ.,க்கும் மேல் எறிந்தேன். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் எனது முக்கிய இலக்கு, ஜப்பானின் டோக்கியோவில் நடக்கவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் (வரும் செப். 30 முதல் 21) தான். இதில் சிறப்பாக செயல்பட வேண்டும். வரும் ஜூலை 5ல் இந்தியாவில் (பெங்களூரு) சர்வதேச வீரர்களுடன் இணைந்து முதன் முறையாக போட்டியில் பங்கேற்க உள்ளேன். இதற்கு முன் பல்வேறு விஷயங்களை சரிசெய்ய வேண்டியது உள்ளது. இருப்பினும், இந்திய போட்டி நல்ல அனுபவமாக இருக்கும். தவிர இந்திய மக்கள், கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளையும் அங்கீகரிக்கத் துவங்கியுள்ளனர். இது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.