தி கோட் மாரியப்பன் * பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம்
பாரிஸ்: பாராலிம்பிக் வரலாற்றில் 'ஹாட்ரிக்' பதக்கம் வென்ற முதல் இந்தியர் என புதிய சாதனை படைத்தார் மாரியப்பன்.பாரிசில் பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் இந்தியா சார்பில் இந்தியா சார்பில் மாரியப்பன், ஷரத் குமார், ஷைலேஷ் குமார் என மூன்று பேர் பங்கேற்றனர். சமீபத்திய சீசனில் சிறப்பாக செயல்பட்ட மாரியப்பன், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் கைப்பற்றி இருந்தார். இதனால் எதிர்பார்ப்பு எகிறியது. கடைசியில் 1.85 மீ., உயரம் தாண்டிய தமிழகத்தின் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். சிறந்த வீரர்இதையடுத்து தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என சாதனை படைத்தார். இதன் மூலம் பாராலிம்பிக் அரங்கில் 'தி கோட்' (The 'GOAT'- Greatest Of All Time- அனைத்து காலத்துக்கும் சிறந்தவர்) என்ற பெருமை பெற்றார். ஏற்கனவே இவர், ரியோவில் தங்கம் (2016), டோக்கியோவில் வெள்ளிப் பதக்கம் (2021) வென்றிருந்தார். தவிர பாராலிம்பிக்கில் 3 பதக்கம் வென்ற நான்காவது இந்தியர் ஆனார்.முன்னதாக ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா (2004, 2016ல் தங்கம், 2021ல் வெள்ளி), துப்பாக்கிசுடுதலில் அவனி லெஹரா (2021ல் தங்கம், வெண்கலம், 2024ல் தங்கம்), தடகளத்தில் ஜோகிந்தர் சிங் பேடி (1984ல் 1 வெள்ளி, 2 வெண்கலம்) என மூன்று பேர், பாராலிம்பிக்கில் தலா 3 பதக்கம் வென்றுள்ளனர். பாதிப்பு எப்படிதமிழகத்தின் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள பெரியவடகம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் 29. இவருக்கு நான்கு சகோதரர், ஒரு சகோதரி உள்ளனர். சிறுவயதில் தந்தை, குடும்பத்தை கைவிட, தாயார் சரோஜா, செங்கல் சுமந்து குழந்தைகளை வளர்த்தார். 5 வயதில் மாரியப்பன் பள்ளிக்கு சென்ற போது, பஸ் விபத்தில் சிக்கினார். இதில் வலது முழங்கால் கீழ் பகுதி எலும்பு நொறுங்கியது. இதில் இருந்து மீண்ட இவர், வாலிபால் விளையாடத் துவங்கினார். பின், உடற்கல்வி ஆசிரியரின் ஆலோசனைப்படி உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றார். தேசிய 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (2015) மாரியப்பன் திறமையை பார்த்த, தற்போதைய பயிற்சியாளர் சத்யநாராயணா, பெங்களூருக்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்கினார்.ரியோ பாராலிம்பிக்கில் அசத்திய இவர், 2004க்கு பின் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரானார். அடுத்து 2021, 2024 என தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் கைப்பற்றினார்.பிரதமர் பாராட்டுபிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில்,' உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பாராட்டத்தக்கது. தொடர்ந்து சிறப்பாக செயல்படும் அவரது திறமை, அர்ப்பணிப்பு வியக்கத்தக்கது,' என தெரிவித்துள்ளார். வெற்றி தொடரும்: தாய் மகிழ்ச்சிபாராலிம்பிக்கில் மாரியப்பன் 'ஹாட்ரிக்' பதக்கம் வென்றதை அவரது சொந்த கிராமத்தில் உள்ள உறவினர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதுகுறித்து அவரது தாய் சரோஜா கூறுகையில், ''என் மகன் தொடர்ந்து வென்று வருகிறார். தங்கம், வெள்ளியை தொடர்ந்து, தற்போது வெண்கலம் வென்றுள்ளார். எனக்கும், இக்கிராமத்துக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து மகன், பல வெற்றிகளை பெறுவார்,'' என்றார்.