வேதகிரீஸ்வரர் கோவில் இடத்தில் பறிமுதல் வாகனங்கள் குவிப்பு
திருக்கழுக்குன்றம், : திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம், மாமல்லபுரம் சாலை பகுதியில் உள்ளது. இப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன், பூந்தோட்டம் அமைத்து பராமரிக்கப்பட்டது.இங்கு பூக்கும் மலர்கள், சுவாமி வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது பூந்தோட்டம் இன்றி, காலியிடமாக உள்ளது. சதுரங்கப்பட்டினம் சாலை, பக்தவச்சலேஸ்வரர் கோவில் அருகில், முன்பு இயங்கிய போலீஸ் நிலையத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன், மாமல்லபுரம் சாலை பகுதியில் இடம் ஒதுக்கி, புதிய கட்டடம் கட்டப்பட்டது.இந்நிலையம் அருகில் உள்ள அறநிலையத்துறை பூந்தோட்ட இடத்தை, விபத்தில் சிக்கும் மற்றும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை வைக்க, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.துவக்கத்தில், சில வாகனங்களே வைக்கப்பட்ட நிலையில், தற்போது வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவை திருடு போகாமல் கண்காணிக்க, போலீசார் 'சிசிடிவி' கேமராவும் அமைத்துள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை இடத்தை, காவல் துறை அத்துமீறி பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டும் பக்தர்கள், வாகனங்களை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.