மகளிர் சுகாதார வளாகம் பாழ் இடித்து அகற்ற வேண்டுகோள்
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் கூடலுார் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரில், அங்கன்வாடி மையம் உள்ளது.இதன் அருகே மகளிர் பயன்பாட்டிற்காக, 12 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இந்த வளாகம் கழிப்பறை, குளியலறை, மின் மோட்டாருடன் நீரேற்று அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகியவற்றுடன் கட்டப்பட்டது.தற்போது, பழுதடைந்து, பயன்படுத்தப்படாமல் சீரழிந்துள்ளது. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளது. மேலும், சுகாதார வளாகத்தின் செப்டிக் டேங்க் மூடப்படாமல் திறந்துள்ளது.அங்கன்வாடி மையம் அருகே உள்ளதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், மகளிர் சுகாதார வளாகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் பெற்றோர் மனு அளித்தும், அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, பாழடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.