மறைமலை நகர் : மறைமலை நகர் - ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை, சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில், ஆப்பூர் - தாலிமங்கலம் இடையே, 300 மீட்டர் துாரத்திற்கு, இருபுறமும் காப்புக்காடுகள் உள்ளன. இதில், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன.இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த பகுதியில், மரங்கள் வளர்ந்து சாலை குறுகலானதால், வாகனங்கள் கடந்து செல்ல தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில், எதிரெதிர் வாகனங்கள் கடக்க முடியாததால், அடிக்கடி வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, இந்த பகுதியில் சாலையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சாலை ஓரம் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, ஆப்பூர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகையில், ”சாலை ஓரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, பள்ளங்களை சீரமைக்க முயலும் போது, வனத்துறை அதிகாரிகள் தடுக்கின்றனர்,” என, கூறினர்.இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் கூறியதாவது:இந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில், பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதைத் தடுக்காத வனத்துறை அதிகாரிகள், மக்களின் சிரமத்தை குறைக்க, சாலையை சீரமைக்கும் பணிகளில் ஈடுபடும் போது, முட்டுக்கட்டையாக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.