பறக்கும் கல்குவாரி லாரிகள் ஆக்கினாம்பட்டு சாலை சேதம்
பவுஞ்சூர்,பவுஞ்சூர் அடுத்த கொடூர் கிராமத்தில் இருந்து ஆக்கினாம்பட்டு பகுதிக்குச் செல்லும், 3 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.இதை சத்தியமங்கலம், ஆக்கினாம்பட்டு, மாலச்சேரி, வேட்டைகாரகுப்பம் மற்றும் கொடூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆக்கினாம்பட்டு சுற்றுவட்டார பகுதியில், நான்கு கல்குவாரிகள் மற்றும் 'கிரஷர்'கள் செயல்படுவதால், இந்த சாலையில் தினமும் ஏராளமான லாரிகள், அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன.இதனால், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, கடுமையாக சேதமடைந்து உள்ளது.கோடை காலத்தில் சாலையில் புழுதி பறப்பதாகவும், மழைக் காலத்தில் சாலை சகதியாக மாறுவதாகவும், வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் பள்ளத்தில் சிக்கி, விபத்துக்குள்ளாகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.