சென்னை:மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ ரயில் தடத்தில், கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.சென்னையில் இரண்டாவது கட்டத்தில், மொத்தமுள்ள மூன்று வழித்தடங்களில், சோழிங்கநல்லுார் - மாதவரம் வழித்தடத்தில் ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக அமைகிறது.இந்த தடத்தில், பெரும்பாலும் மேம்பால பாதை வழியாக அமைவதால், பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட துாண்களில், மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பல்வேறு பணிகளை மேற்கொள்ள, 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.ஏற்கனவே திட்டமிட்டபடி, 2026ம் ஆண்டு முதல், படிப்படியாக மெட்ரோ ரயில் சேவையை துவங்க உள்ளோம். மாதவரம் - சோழிங்கநல்லுார் தடத்தில், 44.6 கி.மீ., துாரத்தில், பெரும்பாலும் மேம்பால பாதையில் மெட்ரோ ரயில் பாதை அமைகிறது.இந்த பணிகள் தாமதமின்றி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள துாண்களில் ரெட்டேரி, கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில், மேம்பால பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.இதற்காக, பிரத்யேக கனரக இயந்திரங்களைக் கொண்டு, துாண்களின் மீது பாலங்களை பாதுகாப்பாக அமைக்கும் பணிகள், அடுத்த ஏழு மாதங்கள் வரை நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.