வெளிநாட்டு பறவை வரத்து குறைவு வெறிச்சோடியது ஓதியூர் ஏரி
செய்யூர்,செய்யூர் அருகே, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு, 20க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் வந்து சேர்ந்து, பின் பகிங்ஹாம் கால்வாய் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது.ஆண்டுதோறும் பருவமழை முடிந்த பின், டிச., மாதத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து, பல்வேறு வகையான பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன.இந்த ஏரியில் தங்கி மீன் குஞ்சுகள், புழு, நத்தை, சிப்பிகளை உணவாக விரும்பி சாப்பிடுகின்றன.பின், இனப்பெருக்கம் செய்து ஏப்ரல், மே மாதத்தில் சொந்த நாடுகளுக்கு திரும்பச் செல்வது வழக்கம்.கடந்த ஆண்டு மதுராந்தகம் வனச்சரக அலுவலகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் நீர்க்காகம், ஊசி வால் வாத்து, அரிவாள் மூக்கன், நீர்த்தாழி, பிளமிங்கோ, கரண்டி மூக்கு கொக்கு, நீர் பறவை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வகையான 20,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்தன.இங்கு அதிகபட்சமாக ஊசிவால் வாத்து, செங்கால் நாரை, பூநாரை, நெடுங்கால் உள்ளான், சின்ன கோட்டான் மற்றும் பெரிய கோட்டான் போன்ற பறவைகள் வரும்.இந்நிலையில், தற்போது ஏரியில் தண்ணீர் குறையத் துவங்கி உள்ள நிலையில், இந்தாண்டு வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து குறைந்து, ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது.வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து குறைந்தது குறித்து, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.