* தொடரும் திருட்டு, கொள்ளையால் செங்கை மக்கள்... அச்சம் * முதியோர், பூட்டிய வீடுகளை குறிவைத்து அட்டகாசம்
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் அதிகரித்து வரும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் வேடிக்கை பார்க்காமல், தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், திம்மாவரம், ஆத்துார் ஆகிய பகுதிகள், நீண்ட காலமாக ரவுடிகளின் புகலிடமாக உள்ளன.இந்த பகுதிகளில், சமீப காலமாக வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, கத்தியால் வெட்டி வழிப்பறி, பணம் வைத்திருப்போரை திசை திருப்பி திருட்டு என, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல், அந்த வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்கிறது.குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்கள், இரவு பணி முடிந்து செல்வோரை குறி வைத்து, இந்த கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. இவர்கள் பெரும்பாலும், வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், போலீசார் எளிதாக கண்டுபிடிக்க முடிவதில்லை.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் என்பது, நடுத்தர குடும்பங்களின் கனவு. சேமிப்பு என்று கருதியே, தங்களின் நீண்ட கால உழைப்பை, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களால், அவர்களின் வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிடுகிறது.அதேபோல, பூட்டிய வீடுகளை குறி வைத்து, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே, தொடரும் குற்றச் செயல்களுக்கு காரணம். போலீசார் முறையாக ரோந்து செல்வதில்லை. சில போலீசார் குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ளதும் சிக்கலுக்கு காரணம். கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் தொடராத வகையில், தடுப்பு நடவடிக்கைகளில், போலீஸ் உயர் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:செங்கை மற்றும் புறநகர் பகுதிகளில், வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, காவல் நிலையத்தில் தெரிவித்துவிட்டு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளோம். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளை வாடகைக்கு விடும்போது, உரிய அடையாள அட்டையை ஆய்வு செய்து, அதன்பின் வாடகைக்கு விடவும் அறிவுறுத்தி உள்ளோம். ஆனால், பல வீடுகளின் உரிமையாளர்கள் அதிக வாடகை கிடைப்பதால், வாடகைதாரரைப் பற்றி முழுமையாக விசாரிக்காமல், வாடகைக்கு விட்டு விடுகின்றனர்.கொரோனா காலத்திற்குப்பின், மறைமலைநகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் பல, தங்களின் வேலை நேரத்தை மாற்றியமைத்துள்ளன.இதன் காரணமாக, நள்ளிரவு நேரங்களில் கூட இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் நடந்து செல்லும்போது, மொபைல்போன் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமீபத்தில் அரங்கேறிய திருட்டு, கொள்ளைகள்l
மார்ச் 11ல், செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு, 12 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாய் திருடப்பட்டன* ஏப்., 6ல், ஆப்பூர் கிராமத்தில், 'ஏசி' மெக்கானிக் வீட்டில், குடும்பத்தினர் துாங்கிக் கொண்டிருந்த நிலையில், கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 35 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்தது *ஏப்., 7 இரவு, செங்கல்பட்டு மணிக்கூண்டு அருகில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு, 53,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்*மே 26ல், ஆத்துாரில் பிரகாஷ் என்பவர் வீட்டில், 50 சவரன் தங்க நகைகள், 18,000 ரூபாய் திருடு போயின* ஜூன் 23ல், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூரில், முருகையன் என்பவர் வீட்டில், 35 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் ரூபாய் கொள்ளை நடந்தது* ஜூன் 24ல், வி.ஐ.பி., நகர் பகுதியில், மாகாவீர் என்பவர் வீட்டை உடைத்து, 27 சவரன் தங்க நகைகள், 1.10 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்* ஜூலை 2ல், வடகால் கிராமத்தில் முதியவர்கள் வசித்த வீட்டில், இரவு நேரத்தில், 45 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.பெரும்பாலும், அதிகாலை வாசலில் கோலமிடும் பெண்கள், இரண்டு நாட்களுக்கு மேல் பூட்டிக் கிடக்கும் வீடுகள், முதியோர் தனியாக வசிக்கும் வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீடுகள், ரயில் நிலையம், மருத்துவமனை பார்க்கிங் பகுதிகள் ஆகியவற்றை குறிவைத்தே மர்ம கும்பல் கைவரிசை காட்டி வருகிறது.
சிங்கபெருமாள் கோவிலில்காவல் நிலையம் என்னாச்சு?
சிங்கபெருமாள் கோ வில் பகுதியில், புதிதாக காவல் நிலையம் அமைக்கப்படும் என, 2023ம் ஆண்டு, சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது. அதன்பின் அறிவிக்கபட்ட படப்பை, மேடவாக்கம், கிளாம்பாக்கம் காவல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. சிங்கப்பெருமாள் கோவில் காவல் நிலையம் அமைந்தால், சுற்றுப்புற பகுதிகளில் குற்ற சம்பவங்கள் குறையும்.