கூடுவாஞ்சேரி தபால் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டக்கோரி மனு
கூடுவாஞ்சேரி : நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி துணைத் தலைவர் லோகநாதன், கூடுவாஞ்சேரியில் உள்ள தபால் நிலையத்திற்கு, சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கலெக்டருக்கு மனு அளித்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி., சாலை மேற்கு பகுதியில், தபால் அலுவலகம் இயங்கி வந்தது. அந்த அலுவலகம், ஏற்கனவே வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வந்தது.தற்போது, சில மாதங்களாக, ஜி.எஸ்.டி., சாலையின் கிழக்குப் பகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதிக்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த தபால் அலுவலகத்தில், முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் உதவித்தொகை பெற்று வருகின்றனர்.அவர்கள் தபால் நிலையம் சென்று வருவதற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், மிகுந்த சிரமம் அடைந்து வருவதோடு, ஆட்டோவில் சென்று வருகின்றனர். இதனால், தேவையற்ற செலவும், அலைச்சலும் ஏற்படுகிறது.எனவே, வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் கூடுவாஞ்சேரி தபால் நிலையத்தை, போக்குவரத்து வசதி நிறைந்த இடத்தில் நிரந்தர கட்டடம் அமைத்து செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.