நில அபகரிப்பு பிரிவில் 4 மனுக்களுக்கு தீர்வு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் நில அபகரிப்பு பிரிவில், மனுக்கள் மீதான விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, வருவாய், காவல், பதிவு, நில அளவை உள்ளிட்ட துறைகள் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. அதன்பின், மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு தலைவராக, கலெக்டரின் நேர்முக உதவியாளர் -- நிலம், உறுப்பினர் செயலராக போலீஸ் டி.எஸ்.பி., உறுப்பினர்களாக உதவி பதிவுத்துறை தலைவர் உள்ளிட்டடோரை நியமித்து, கலெக்டர் உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நகேந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. தாசில்தார் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், நிலம் அபகரிப்பு தொடர்பாக, ஐந்து மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. விசாரணைக்கு பின், நான்கு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.ஒரு மனுவிற்கு யாரும் வாரததால், அம்மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டம், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைதோறும் நடைபெறுகிறது. அதில், நிலம் தொடர்பான மனுக்கள் அளித்து தீர்வு காணலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.