பவுஞ்சூரில் ரூ.58 லட்சத்தில் பொதுநல மைய கட்டடம்
செய்யூர் : பவுஞ்சூர் பஜார் வீதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இது, திருவாதுார், கடுகுப்பட்டு, பச்சம்பாக்கம், வெளிக்காடு என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.புறநோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை என, தினசரி நுாற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1,700 சதுர அடி பரப்பளவில், புதிய பொதுநல மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த ஏப்., மாதம் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.அதில், 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்த மாதம் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்று, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது நல மைய கட்டடத்தில், ரத்தம், சர்க்கரை, சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனை மையங்கள் அமைய உள்ளன.