உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நகராட்சியுடன் 15 ஊராட்சிகளை இணைக்க... எதிர்பார்ப்பு!:அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்

நகராட்சியுடன் 15 ஊராட்சிகளை இணைக்க... எதிர்பார்ப்பு!:அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியுடன், 15 ஊராட்சிகளை இணைக்கும் திட்டம், அரசுக்கு பரிந்துரை செய்து, இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.செங்கல்பட்டு நகராட்சி 1889ம் ஆண்டு உருவானது. தமிழகத்தில், இரண்டாவது நகராட்சியாகவும், 1947ம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1972ம் ஆண்டில் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1984ம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.நகராட்சி 6.09 சதுர கி.மீ., பரப்பளவு உடையது. 33 வார்டுகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், சப்- - கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லுாரி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், வங்கிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் இல்லை. இதனால், வீட்டுவரி, சொத்து வரியினங்கள் வாயிலாக மட்டுமே, நிர்வாகத்திற்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. நத்தம், அனுமந்தபுத்தேரி, மும்மலை, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அரசு புறம்போக்கு நிலமாகவும், தொல்லியல் துறை இடமாகவும் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களிடம், வீடு, நிலம், குடிநீர் போன்ற வரியினங்களை வசூலிப்பதில், நகராட்சிக்கு சிக்கல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, ஒவ்வொரு திட்டத்திற்கும், மாநில அரசிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இந்நிலையில், அடிப்படை வசதிகளை செய்துதர, 10 கோடி ரூபாய்க்கு மேல் நிதி தேவைப்படுகிறது.நகராட்சியின் எல்லை பகுதியை விரிவுபடுத்துவதன் மூலம், வருவாயை பெருக்குவது குறித்து நகராட்சி நிர்வாகம் ஆலோசித்தது.இதுதொடர்பாக, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், மேலமையூர், வல்லம், வீராபும், உள்ளிட்ட 14 ஊராட்சிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், திருமணி ஊராட்சி என, 15 ஊராட்சிகளை, செங்கல்பட்டு நகராட்சியுடன் இணைக்க, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால், பெருநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர். அதன்பின், 15 ஊராட்சிகளை இணைக்க, கலெக்டர் வாயிலாக அரசுக்கு கருத்துருவை அனுப்பினர். இந்த கருத்துரு அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அரசு கிடப்பில் போட்டது. தமிழக சட்டபை கூட்டத்தொடரில், நகராட்சி மானிய கோரிக்கையில், 15 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.நகராட்சியுடன், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒரு ஊராட்சி என, 15 ஊராட்சிகள் இணைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம்.- விஜயகுமார்ஆணையர், செங்கல்பட்டு.

எந்தெந்த ஊராட்சிகள்

செங்கல்பட்டு நகராட்சியுடன், 15 ஊராட்சிகளை சேர்ப்பதால், நகராட்சியின் பரப்பளவு 75.42 சதுர கி.மீ., சராசரி ஆண்டு வருவாய் 40.17 கோடி ரூபாயாக உயரும் வாய்ப்பு உள்ளது. காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், சிங்கபெருமாள்கோவில், செட்டிப்புண்ணியம், அஞ்சூர், குண்ணவாக்கம், வீராபுரம், தென்மேல்பாக்கம், பட்ரவாக்கம், புலிப்பாக்கம், திம்மாவரம், பழவேலி, ஆலப்பாக்கம், மேலமையூர், வல்லம், ஒழலுார் ஆகிய ஊராட்சிகள் அடங்கும். திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், திருமணி ஊராட்சியும் அடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை