உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு

வீடு ஒப்படைக்க தாமதம் ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை:சென்னை, பழைய மாமல்லபுரம் சாலை தையூரில், 'அக் ஷயா' நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், 2013ல் துவங்கியது. இதில் வீடு வாங்க, சி.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்பவர், அதே ஆண்டில் முன்பதிவு செய்தார்.இதற்காக அவர், பல்வேறு தவணைகளில், 47.10 லட்சம் ரூபாயை செலுத்தி உள்ளார். இதற்கான ஒப்பந்தப்படி, 2016ல் அந்நிறுவனம் வீட்டை ஒப்படைத்து இருக்க வேண்டும். ஆனால், கட்டுமான பணிகளை மிக தாமதமாக அந்நிறுவனம் மேற்கொண்டு வந்ததால், குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்கப்படவில்லை. இதனால், சி.ஜி.கிருஷ்ணமூர்த்தி ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தார். இந்த மனு தொடர்பாக ஆணைய விசாரணை அலுவலர், என். உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: இதில் சம்பந்தப்பட்ட திட்டத்தில், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட காலத்தைவிட, 8 ஆண்டுகளுக்கு மேலாக பணம் செலுத்தியவர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது தெரிகிறது. இதற்கு கட்டுமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. எனவே, வீடு ஒப்படைப்பதில் அதிகபட்ச தாமதம் செய்த நிறுவனத்தால் மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக, கட்டுமான நிறுவனம், 5 லட்சம் ரூபாயை அளிக்க வேண்டும். இத்துடன் வழக்கு செலவுக்காக, 50,000 ரூபாயை அந்நிறுவனம், மனுதாரருக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !