தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறு அரசு பணம் வீணடிப்பு
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவுக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அரசு பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தோரும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இம்மாவட்டங்களில் விபத்தில் சிக்குவோரும், அவசர சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவுக்காக, அருகிலேயே 200 அடி ஆழத்திற்கு, மூன்று லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து, போதிய அளவிற்கு தண்ணீர் வராததால், சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, விபத்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு, மற்றொரு ஆழ்துளை கிணறு அமைக்க, பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் வராததால், அரசு பணம் வீணடிக்கப்பட்டு உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.