நெற்களமா... ஜல்லி கொட்டும் இடமா? வீரபோகம் விவசாயிகள் கடும் அதிருப்தி
செய்யூர்:செய்யூர் அடுத்த வீரபோகம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில், கிணறு மற்றும் ஏரி நீர்பாசனம் வாயிலாக, 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இங்கு, அதிகளவில் நெல் பயிரிடுவது வழக்கம். அறுவடை செய்யப்படும் நெற்பயிரை உலர்த்த நெற்கள வசதி இல்லாததால், நெல்லை உலர்த்த விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக நெற்களம் அமைக்கப்பட்டது.இந்நிலையில், புதிதாக அமைக்கபட்ட நெற்களத்தில் எம் - சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் நெற்களத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நெற்களத்தில் குவிந்துள்ள ஜல்லிக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.