உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சேதமடைந்த சாலையால் சட்டமங்கலத்தில் விபத்து அபாயம்

சேதமடைந்த சாலையால் சட்டமங்கலத்தில் விபத்து அபாயம்

மறைமலை நகர்:மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை, சட்டமங்கலம் பகுதியில் சேதமடைந்து, விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால், சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் -- ஆப்பூர் சாலை, 7 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில்- - ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்புச் சாலையான இச்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், வேன்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலை, சட்டமங்கலம் பகுதியில் சேதமடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், வாகனங்களின் டயர்களில் அடிக்கடி குத்தி, 'பஞ்சர்' ஆகின்றன. இப்படி, பேருந்து வசதி இல்லாத இந்த சாலையை பயன்படுத்தும் இப்பகுதி மக்கள், கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !