உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் மருத்துவமனை புது கட்டடம் பணிகள் மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

செய்யூர் மருத்துவமனை புது கட்டடம் பணிகள் மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு

செய்யூர், செய்யூர் அரசு மருத்துவமனையில், 3.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் புதிய கட்டடம் கட்டுமானப் பணிகள் மந்தமாக நடந்து வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பல கட்டடங்கள், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை நாளடைவில் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன. பழைய கட்டடங்களை அகற்றி, மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடங்கள் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், 3.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை வாயிலாக, பழைய கட்டடங்களை அகற்றி, இரண்டு தளங்களுடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தனியார் நிறுவனத்திற்கு,'டெண்டர்' விடப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றப்பட்டு, கடந்த மார்ச் 20ம் தேதி, புதிய கட்டடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், கட்டுமானப் பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி, புதிய கட்டடத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி