புறநகர் சாலையோர கட்டடங்களில் அகற்றப்படாத பேனர் தாங்கும் கம்பிகள்
தாம்பரம்:சென்னை புறநகரில், ஜி.எஸ்.டி.,- சாலை, தாம்பரம் - வேளச்சேரி, தாம்பரம் - முடிச்சூர், பல்லாவரம் - திருநீர்மலை, பல்லாவரம் - துரைப்பாக்கம், பல்லாவரம் - குன்றத்துார் சாலைகளை ஒட்டியுள்ள கட்டடங்களின் மேல், ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.அதேபோல், மின் கம்பங்களில், சிறிய அளவிலான விளம்பர தட்டிகளை கட்டுவதும், பேனர் வைப்பதும் தொடர்கிறது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.ஆனால், புறநகரில், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அவ்வப்போது பேனர்கள் அகற்றப்பட்டாலும், பேனர்களை தாங்கும் கம்பிகள், கட்டடங்களின் மேற்பகுதியில் அப்படியே உள்ளன.தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் பேனர்களும், பேனர்களை தாங்கும் கம்பிகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.அதனால், மாநகராட்சி நிர்வாகம், கட்டடங்களின் மேற்பகுதியில் உள்ள பேனர்களை தாங்கும் கம்பிகளை, வெல்டிங் இயந்திரத்தின் வாயிலாக வெட்டி அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.