செங்கை மருத்துவமனையில் வணிகம் மகளிர் குழுக்களுக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. இதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்கள் விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிறுதானிய உணவு வகைகளை விற்பனை செய்ய, தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். தவிர, செங்கை அரசு மருத்துவமனையிலிருந்து 5 -- 8 கி.மீ., துாரத்திற்குள், மகளிர் குழுக்கள் இருக்க வேண்டும். மேலும், மகளிர் திட்ட அலுவலகத்தால் தர மதிப்பீடு செய்யப்பட்ட குழுக்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, 'மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம்' என்ற முகவரியில், நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 29ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.