செங்கை ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் வராததால் மூடல்
செங்கல்பட்டு, மாணவர்கள் தங்கி படிக்க வராததால் செங்கல்பட்டு, மேலமையூரில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மூடப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வகையில், செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியில், ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் தங்கி படிக்க வராமல், விடுதி பூட்டியே உள்ளதால், பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகம், வணிக வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள், தனியார் கட்டடங்களில், வாடகையில் இயங்கி வருகின்றன.இதுமட்டுமின்றி, மாவட்ட வன அலுவலகத்திற்கு இடம் கேட்டு கலெக்டரிடம், வனத்துறை அலுவலர்கள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை, அரசு அலுவலகங்கள் இயங்க ஒதுக்கினால், வாடகை கட்டடங்களில் இயங்க வேண்டிய அவசியம் இருக்காது.எனவே, மூடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை, அரசு அலுவலகங்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலரிடம் கேட்ட போது,'ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு மாணவர்கள் வராததால், மூடப்பட்டு உள்ளது. விடுதி குறித்து, ஆதிதிராவிடர் மாநில ஆணையர் நடவடிக்கை எடுப்பார்' என்றார்.