குறுக்கே கடக்கும் வாகன ஓட்டிகள் ஒரகடம் சாலை சந்திப்பில் ஆபத்து
மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், சிங்கபெருமாள் கோவில் - ஒரகடம் சாலை சந்திப்பு அருகில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பில், அடிக்கடி வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இதையடுத்து, இந்த சந்திப்பில் வாகனங்கள் கடக்க முடியாதபடி, கடந்த வாரம் போக்குவரத்து தடுப்புகள் அமைத்து மூடப்படது.செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள், அருகில் உள்ள மெல்ரோசாபுரம் சந்திப்பிலும், ஒரகடம் செல்லும் வாகனங்கள், திருத்தேரி கடவுப்பாதையில் சென்று திரும்பும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், ஒரகடம் சாலையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மெல்ரோசாபுரம் பகுதியில் சாலையை கடக்காமல், மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதியில், குறுக்கு வழியில் ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர்.குறிப்பாக, பெண்கள், பள்ளி குழந்தைகளுடன் செல்லும் வாகன ஓட்டிகள் கூட, ஆபத்தை உணராமல் சீக்கிரத்தில் செல்ல வேண்டும் என்ற நோக்கில், வேகமாக சாலை மையத்தடுப்பில் ஏறி சாலையை கடக்கின்றனர்.எனவே, இந்த குறுக்கு வழி பாதையை அடைக்க, போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.