துறை ரீதியான விளையாட்டு தீயணைப்பு வீரர்கள் உற்சாகம்
சென்னை நந்தனத்தில் துவங்கிய, தீயணைப்பு துறையின் மண்டல அளவிலான போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள், துறைரீதியான விளையாட்டுகளில் உற்சாகமாக பங்கேற்று அசத்தி வருகின்றனர்.தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், வடக்கு மண்டல வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரி மைதானத்தில் துவங்கியது. இதில், தீயணைப்பு துறை சார்ந்த திறனறி போட்டிகளான, அணி பயிற்சி, நீர்வீடுகுழாய் பயிற்சி, ஏணி பயிற்சி, தந்திர கதம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100, 400, 800 மீட்டர் ஓட்டம், 'ரிலே' ஓட்டம் போன்ற தடகள போட்டிகளும், நீச்சல், வாலிபால், கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்ட, 29 வகையான போட்டிகளும் நடக்கின்றன. போட்டியில், தீயணைப்பு துறையின் வட மண்டலத்திற்கு உட்பட்ட, தென்-சென்னை, வட சென்னை, மத்திய சென்னை, சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்பு வீரர்கள், 100க்கும் மேற்பட்டடோர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக துறைரீதியான விளையாட்டில் அசத்தி வருகின்றனர். காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, வடமண்டல இணை இயக்குநர் சத்தியநாராயணன் துவங்கி வைத்தார்.போட்டிக்கான ஏற்பாடுகளை வடமண்டல மாவட்ட அலுவலர்களான சரவணன், தென்னரசு, ராபின், லோகநாதன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். போட்டிகள் நாளை வரை நடக்கின்றன.