பெருமாள் கோவில் அருகில் தேங்கும் கழிவு நீரால் பக்தர்கள் அவதி
மறைமலை நகர்,':பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் அருகில் தேங்கும் கழிவு நீரால், பக்தர்கள் அவதியடைகின்றனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், நுாற்றுக்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன. சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு அனுமந்தபுரம் சாலையில் பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலுக்கு செல்லும் தேரடி தெருவில் உள்ள கால்வாய் முழுதும் கழிவு நீர் தேங்கி தண்ணீர் செல்லாமல் நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. தொடர்ந்து கழிவு நீர் தேங்குவதால் இந்த பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஊராட்சியில் பல்வேறு இடங்களில் உள்ள கழிவு நீர் கால்வாய்களும் இதே நிலையில் உள்ளது. எனவே கழிவு நீர் பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.