மதுராந்தகம் பஸ் நிலையத்தில் மண் புழுதி பறப்பதால் அவதி
மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், 'எம்.சாண்ட்' மண்ணால் புழுதி பறப்பதால், பயணியர் அவதிப்படுகின்றனர்.மதுராந்தகத்தில், பழைய பேருந்து நிலையம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு, 2.40 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால், மதுராந்தகம் வடக்கு பைபாஸ் பகுதியில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.தினமும், 5,000க்கும் மேற்பட்ட பயணியர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.பேருந்து நிலையம் அமைக்கும் போது, 'எம்.சாண்ட்' மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது. இதனால், பேருந்துகள் உள்ளே வரும் போதும், வெளியேறும் போதும், புழுதி பறக்கிறது. இதனால், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணியருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது.எனவே, நகராட்சி நிர்வாகத்தினர் காலை மற்றும் மதிய நேரத்தில், தற்காலிக பேருந்து நிலையத்தில் தண்ணீர் ஊற்றி, மண் புழுதி பறப்பதை தடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.