ஆளவந்தார் அறக்கட்டளைக்கு செயல் அலுவலர் பொறுப்பேற்பு
மாமல்லபுரம்:ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் பிரசித்தி பெற்றது ஸ்தலசயன பெருமாள் கோவில். அதே துறையின் கீழ், ஆளவந்தார் அறக்கட்டளையும் இயங்குகிறது.கோவில், அறக்கட்டளை ஆகிய நிர்வாகங்களுக்கு, ஒரே செயல் அலுவலர் பணிபுரிகிறார். ஸ்தலசயன பெருமாள் கோவிலின் குழு கோவிலாக, சதுரங்கப்பட்டினத்தில் உள்ள திருவரேஸ்வரர், மலைமண்டல பெருமாள் உள்ளிட்ட கோவில்களும் நிர்வகிக்கப்படுகின்றன.ஆளவந்தார் அறக்கட்டளையின் குழு கோவிலாக, மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர், கடம்பாடி மாரி சின்னம்மன், கூவத்துார் திருவாலீஸ்வரர் ஆகிய கோவில்களும் நிர்வகிக்கப்படுகின்றன.அங்கு செயல் அலுவலராக பணியாற்றிய சக்திவேல், பதவி உயர்வுபெற்று, விழுப்புரம் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல், மாமல்லபுரத்திற்கும் கூடுதல் பொறுப்பு வகித்தார்.இந்நிலையில், மாமல்லபுரம் செயல் அலுவலராக, செல்வகுமார் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தேர்வுபெற்று, முதல் பணி நியமனமாக, அவர் இங்கு நியமிக்கப்பட்டுள்ளார்.