கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனையில் 39 நபர்களுக்கு இலவச டயாலிசிஸ்
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார மையத்தில் உள்ள, கட்டணமில்லா டயாலிசிஸ் மையத்தில், 39 நபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில், தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில், மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம் செயல்படுகிறது.இங்கு, 'சி.எஸ்.ஆர்.,' எனப்படும், பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பு நிதி வாயிலாக, ஒரு கோடி ரூபாய் செலவில், கட்டணமில்லா டயாலிசிஸ் மையம், கடந்த பிப்., 22ம் தேதி துவக்கப்பட்டது.இந்த மையத்தில், ஐந்து இயந்திரங்கள் மற்றும் ஐந்து படுக்கைகள் உள்ளன. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாக செயலிழந்தவர்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரையில், முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:ஒரு நோயாளிக்கு, வாரம் மூன்று முறை என, தற்போது 39 நோயாளிகளுக்கு இந்த மையத்தில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டயாலிசிஸ் தேவைப்படும் நோயாளிகள் ரேஷன் அட்டை, ஆதார் அட்டையுடன் மையத்திற்கு நேரில் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.