உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் மழையில் நனைந்து வீண்

வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள் மழையில் நனைந்து வீண்

மதுராந்தகம்: மதுராந்தகத்தில், தொகுப்பு வீடுகளுக்காக வழங்கப்படும் இரும்பு கம்பிகள், திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளதால், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. மதுராந்தகம் ஒன்றியத்தில், 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டம், கனவு இல்லம் போன்ற திட்டங்களின் கீழ், ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அரசு சார்பில் கட்டித் தரப்படும் தொகுப்பு வீடுகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை மூலமாக, இரும்பு கம்பிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், மதுராந்தகம் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகளுக்கு வழங்கப்படும் இரும்பு கம்பிகள், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், திறந்தவெளியில் மண் தரையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த இடம் பள்ளமாக உள்ளதால், மழைநீர் தேங்கியுள்ளது. இதில் கம்பிகள் நனைந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன. இந்த கம்பிகளை பயன்படுத்தி பயனாளிகள் வீடு கட்டினால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும். எனவே, திறந்தவெளியில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பிகளை, கொட்டகை அமைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென, வீடு கட்டும் பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . இதுகுறித்து, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி கூறியதாவது: மதுராந்தகம் ஒன்றியத்தில் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு, இரும்பு கம்பிகள் உடனடியாக வழங்கப்படும். கம்பிகளை பாதுகாப்பாக வைக்க கொட்டகை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ