காட்டூர் சந்திப்பு சாலை படுமோசம் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
திருப்போரூர்:காட்டூர் சந்திப்பு சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளதால், சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் அடுத்த காட்டூர் சந்திப்பு சாலையை, சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் லாரிகள் உட்பட ஏராளமான வாகனங்களும், இச்சாலையில் செல்கின்றன. தற்போது, இந்த சாலை சந்திப்பில் ஜல்லிகற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் திடீர் பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில், இச்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்குகின்றனர். அதேபோல், சாலையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்குகிறது. மேலும், மழை நேரத்திலும் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், இங்கு 10க்கும் மேற்பட்ட சிறிய விபத்துகள் நடந்துள்ளன.நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கவனித்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.