அகத்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
செய்யூர்:சிறுவங்குணத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. செய்யூர் அடுத்த சிறுவங்குணம் கிராமத்தில் 1,400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த அகிலாண்ட நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்கு முன் கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், 1.5 கோடி ரூபாயில் புதிய கோவில் கட்டி திருப்பணி மேற்கொண்டனர். கோவில் குளம் சீரமைக்கப்பட்டு, புதிய விமானம்,மண்டபம்,விநாயகர், முருகன், அய்யப்பன் மற்றும் நவகிரகங்களுக்கு புதிய சிலைகள் அமைக்கப்பட்டு, திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை 5ம்தேதி துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தது. நேற்று காலை 10:10 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும்,10:20 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்து. அகத்தீஸ்வரருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சிறுவங்குணம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.