போக்குவரத்திற்கு இடையூறாக தலைவர்கள் பிறந்தநாள் பேனர்கள்
கூடுவாஞ்சேரி,:வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கட்சி தலைவர்கள் பிறந்தநாளுக்காக, சாலையோரம் வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் இன்னும் அகற்றப்படாததால், வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.கடந்த பிப்., 24ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் மார்ச் 1ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இரண்டு கட்சியினரும், கட்சித் தலைமைக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்ட, சென்னை மற்றும் புறநகர் பகுதி முழுதும், பல இடங்களில் விளம்பர பேனர்களை வைத்தனர்.அதன்படி, வண்டலுார் முதல் கூடுவாஞ்சேரி இடையிலான ஜி.எஸ்.டி., சாலையில், அணுகுசாலை மற்றும் நடைமேடைகளை ஆக்கிரமித்து, 20க்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டன.பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக வைக்கப்பட்ட இந்த பேனர்கள், இதுவரை அகற்றப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், சாலையோர கடைக்காரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலை மட்டுமல்லாது, நகரின் உட்புற பகுதியிலும் ஆங்காங்கே இதுபோன்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு, இன்னும் அகற்றப்படவில்லை.ஜெயலலிதா பிறந்தநாள் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஸ்டாலின் பிறந்தநாள் முடிந்து 25 நாட்கள் கடந்துவிட்டன. இன்னும் விளம்பர பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது, அரசியல் கட்சியினரின் மக்கள் விரோத போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது.அரசியல் கட்சி பேனர்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த பேனர்களை அகற்ற, காவல் துறையினரும் அஞ்சுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, பேனர்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.