மாமல்லை வாகன நுழைவு கட்டண வசூல் டெண்டர் விடாமல் இழுத்தடிப்பு
மாமல்லபுரம், மாமல்லபுரத்தில், சுற்றுலா வாகன நுழைவுக் கட்டணம் வசூல் உரிம பொது ஏலம் நடத்தப்படாமல், ஆறு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களைகாண, சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்கள் பயணம் செய்யும் கார், பேருந்து, வேன், இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு, பேரூராட்சிநிர்வாகம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும்,ஏப்., 1ம் தேதி முதல், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, கட்டணம் வசூலிக்க, இந்நிர்வாகம் பொது ஏலம் நடத்தி, அதிக தொகைக்கு கோருபவருக்கு உரிமம் வழங்கும்.இந்த ஆண்டு லோக்சபா தேர்தல், நகராட்சி நிர்வாக துறை அனுமதி தாமதம் ஆகிய காரணங்களால், பொது ஏலம் நடத்தப்படவில்லை. ஊழியர்கள் வாயிலாக, நிர்வாகமே கட்டணம் வசூலிக்கிறது.இப்பணியில், அலுவலக ஊழியர்களையே ஈடுபடுத்துவதால் குடிநீர் வினியோகம், பொது சுகாதாரம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் முடங்குகின்றன.மேலும், வார இறுதி, விடுமுறை நாட்களில், வாகனங்கள் ஏராளமாக குவிந்தும், சில ஊழியர்கள் கட்டண வசூலை குறைத்து கணக்கு காண்பிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.வாகன கட்டண பொது ஏல அனுமதி குறித்து, மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் குழுவினர் கூடி அனுமதி அளிக்க வேண்டும். குழுவினர் கூடுவது ஆறு மாதங்களாக தாமதமாகி, வாகன கட்டண பொது ஏலம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.இதனால், பேரூராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.