உள்ளூர் செய்திகள்

வரைபடம்

வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திற்கு... ‘ராம்சார்’ திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள கிராமங்கள்மதுராந்தகம், ஆக. 27– செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சார்’ குறியீடு மத்திய அரசு வழங்கியுள்ளது. சரணாயலத்தை சுற்றி வான் வழியாக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உள்ள கிராமங்களின் உத்தேச வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வனத்துறை சார்பில் 1936ல், உருவாக்கப்பட்டது. வேடந்தாங்கல் ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்டதாகும். அதேபோல், வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 1989ல், கரிக்கிலி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பறவைகள் வருகை பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில், பல மாநிலங்களில் இருந்து நத்தைகொத்தி நாரை, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், புள்ளிமூக்கு வாத்து, கூழைக்கடா, கரண்டி வாயன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகைகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இடம்பெயர்ந்து வேடந்தாங்கலில் தங்கி செல்கின்றன. குளிர் காலமான செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், வெளிநாட்டு பறவைகளின் வருகை தொடங்கும். டிச., ஜன., பிப்., ஆகிய மூன்று மாதங்களில் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கோடைகாலமான மார்ச், ஏப்., மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும். பொதுமக்களுக்கு வனத்துறை அறிவிப்பு: வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் குறியீடு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால், சரணாயலத்தை சுற்றி வான் வழியாக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உள்ள கிராமங்களில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது. வனத்துறை அனுமதி பெற்று கட்டுமான பணியை மேற்கொள்ள வேண்டும். வீட்டுமனை பிரிவுகள் வாங்கும் போது வனத்துறை கட்டுப்பாட்டில், சம்பந்தப்பட்ட இடம் உள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் வனத்துறை அனுமதியின்றி துார்வார கூடாது. இயற்கை, சுற்றுச்சூழலோடு இப்பகுதியை வைத்துக்கொள்ள விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த இரண்டு சரணாலயங்களை மேம்படுத்தினால், சுற்றுலா மேம்படும். இதனால், இங்குள்ள மக்களுக்கு சிறிய கடைகள், உணவகங்கள் மூலம் வருமானம் கிடைக்கும். பெண்கள் மேம்பாட்டிற்கு வங்கி கடன் உதவி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அட்டவணையில் சேர்ப்பு: வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயத்தை சுற்றி மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்த 20 கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவை சேர்ந்த 18 கிராமங்கள் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து ஐந்து கி. மீ., தொலைவில் கரிக்கிலி ஊராட்சி அமைந்துள்ளது. கரிக்கிலி ஏரியில் நீர் கடம்ப மரங்கள் அதிகம் உள்ளதால், பறவைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டன. இதனால், வான் வழியாக ஐந்து கிலோ மீட்டர் துாரத்திற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அறிவிப்பு கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள நிலங்களிலோ அல்லது அட்டவணையில் உள்ள கிராம நிலங்களின் மீது உரிமை அல்லது ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம். ராம்சார் திட்ட அறிவிப்பின் படி, இரண்டு மாதங்களுக்குள் அத்தகைய உரிமையின் தன்மை அளவையும், வேண்டிய விபரங்களுடன் எழுத்துருக்கள் வாயிலாக குறிப்பிட்ட படிவத்தில் எழுதி அனுப்ப வேண்டும். வீரப்பன் கலெக்டர் செங்கல்பட்டு அடிப்படை வசதி தேவை கரிக்கிலியை பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஏதும் இன்றி, இப்பகுதி மக்கள் பொருளாதார சிக்கலில் உள்ளனர். இந்த கிராமங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் வந்தால், அப்பகுதி மக்களுக்கு தேவையான கழிவு நீர் கால்வாய், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொடியான், 54, கரிக்கிலி, செங்கல்பட்டு வனக்கோட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கிராமங்கள்: தண்டரை, கருங்குழி, அண்டவாக்கம், வேடவாக்கம், புதுப்பட்டு, பில்லாந்திக்குப்பம், குன்னவாக்கம், துறையூர், கரிக்கிலி, சித்தாமூர், கொளத்துார், பழக்காடு, வெள்ளப்புத்துார், பாப்பநல்லுார், பள்ளியகரம், கல்லங்கொள்ளை, கருணாகரச்சேரி, குமாரவாடி, மலைவையாவூர், பேட்டை, குன்னங்குளத்துார், புழுதிவாக்கம், நெல்லி, மங்கலம், நெல்வாய், நெல்வாய் கூட்ரோடு, இந்திராபுரம், சுக்கன்கொள்ளை. –––––––––––––––––––––––––––––––––– காஞ்சிபுரம் வனக்கோட்டம், உத்திரமேரூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்கள்: தோட்ட நாவல், வனத்தோடு, ரெட்ட மங்கலம், விண்ணமங்கலம், காட்டுப்புத்துார், கைத்தண்டலம், ஒழையூர், நெல்வேலி, கட்டியம்பந்தல், பெருங்கோழி, தலராம்பூண்டி, கடல் மங்கலம், ஆலஞ்சேரி, சடச்சிவாக்கம், சேந்தமங்கலம், மெய்யூர் ரோடு, கீழோடை, சிறுகோழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை