சாலை விரிவாக்கத்துக்கு அகற்றிய மின்கம்பங்கள் மீண்டும் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
மறைமலை நகர்:திருக்கச்சூர் சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்றிய மின்கம்பங்களை, மீண்டும் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மறைமலை நகர் -- திருக்கச்சூர் சாலை, 5 கி. மீ., துாரம் உடையது. சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீ பெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலையான இதை அகலப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, மறைமலை நகர் -- பேரமனுார் வரை, 3.5 கி.மீ., துாரத்திற்கு, இரண்டு கட்டங்களாக, 2023ல் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தன.விடுபட்ட திருக்கச்சூர் -- பேரமனுார் வரை, 1.4 கி.மீ., துாரம் கொண்ட சாலையை விரிவாக்கும் பணிகள், 2.70 கோடி ரூபாயில், கடந்த பிப்ரவரியில் துவக்கப்பட்டு, தற்போது முடிந்துள்ளன. இதில், ஐந்து இடங்களில் மழைநீர் செல்லும் சதுர வடிவிலான ஐந்து சிறு பாலங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக, சாலையோரம் இடையூறாக இருந்த, மின்கம்பங்கள் அகற்றப்பட்டன.தற்போது சாலை விரிவாக்க பணிகள் நிறைவடைந்தும், மீண்டும் மின் கம்பங்கள் அமைக்கப்படாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த சாலையை அதிக அளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் மின் விளக்குகள் மற்றும் இரவில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால், விபத்து அபாயம் நிலவுகிறது.எனவே, இந்த பகுதியில் மீண்டும் மின் கம்பம் அமைத்து மின் விளக்குகள் பொருத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.