உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலையில் ஒளிராத விளக்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜி.எஸ்.டி., சாலையில் ஒளிராத விளக்கு விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மறைமலை நகர்:ஜி.எஸ்.டி., சாலையில் பல்வேறு இடங்களில் காட்சி பொருள்களாக உள்ள மின் விளக்குகளை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை. மேலும் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் பகுதிகளை சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வழியாக டூ-- வீலர்கள், கார்கள், பேருந்து வழியாக சென்று வருகின்றனர்.இந்த சாலை நடுவே உள்ள மைய தடுப்பில் வாகன ஓட்டிகள் வசதிக்காக மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சாலை புறநகர் பகுதிகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி. இங்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகளின் போது மின் கம்பங்களில் இருந்து மின் இணைப்பு அகற்றப்பட்டது.இதன் காரணமாக மின் விளக்குகள் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் வெறும் காட்சி பொருளாக பயனற்ற நிலையில் உள்ளது.இருள் சூழ்ந்த சாலையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்துகள் ஏற்படும் முன் மின் விளக்குகளை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி