அனுமந்தபுரம் சாலையில் தொடரும் நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், தனியார் மருத்துவமனைகள், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளிட்டவை உள்ளன.இங்கு மாசி மாத தெப்ப உற்சவம், நரசிம்ம ஜெயந்தி, வைகாசி பிரம்மோத்சவம் உள்ளிட்ட விேஷச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். வார இறுதி நாட்களிலும் அதிக அளவில் பக்தர்களும் வந்து செல்வர்.இந்த சாலை ஓரம், இருபுறமும் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மழைநீர் கால்வாய் மற்றும் சாலையில் குறிப்பிட்ட அளவு ஆக்கிரமிப்பு செய்து, தகர ஓடுகள் அமைத்து பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகளை வைத்து உள்ளனர்.மேலும், கடை மற்றும் கோவிலுக்கு இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள், தங்களின் வாகனங்களை சாலை ஓரம் நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.கடந்த 31ம் தேதி முதல் கோவிலில் பிரம்மோற்சவம் துவங்கி, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வதால், மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக, அவசர கால வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த பகுதியில் சாலை ஓரம் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.