அச்சிறுபாக்கம் மாணவர் விடுதியில் விஷ ஜந்துக்கள் உலவுவதால் பீதி
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கத்தில், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.அச்சிறுபாக்கம் மார்வர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக, கடந்த 2013ல் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது.இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர்.மாணவர் விடுதி கட்டடம் அருகே உள்ள காலி பகுதிகளில், புதர்கள் நிறைந்து உள்ளதால், விஷ ஜந்துக்கள் அதிகமாக நடமாடுகின்றன. இதனால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து, புதர்களை அப்புறப்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.