உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் பஸ் நிலையத்தில் கூடுதலாக நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை

மதுராந்தகம் பஸ் நிலையத்தில் கூடுதலாக நிழற்குடை அமைக்க பயணியர் கோரிக்கை

மதுராந்தகம்: மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், கூடுதலாக நிழற்குடை அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை சார்பில், 24 புறநகர் பேருந்துகள், 25 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சூணாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழிநாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும், 5,000க்கும் மேற்பட்ட பயணியர் பயன் படுத்தி வருகின்றனர். மழை மற்றும் வெயில் காலங்களில் பயணியர் சிரமத்தைப் போக்க, இந்த பேருந்து நிலையத்தில் தற்காலிக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது, பயணியருக்கு போதுமானதாக இல்லை. தற்போது, வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால், இந்த நிழற்குடையில் அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பயணியர் அருகில் உள்ள கடைகளில், தஞ்சம் அடைகின்றனர். எனவே, கூடுதலாக நிழற்குடை அமைக்கவும், தற்போதுள்ள நிழற்குடை பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த முடியாத அளவிற்கு இரும்பு கம்பிகளால் தடுப்புகள் அமைக்கவும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை