செய்யூர் அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்கி நோயாளிகள் தவிப்பு கலெக்டர் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்
செய்யூர்:செய்யூர் அரசு மருத்துவமனையில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மருத்துவமனைக்குள் தண்ணீர் தேங்கி, நோயாளிகள் அவதிப்படுகின்றனர். வடிகால்வாய் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.செய்யூர் பஜார் வீதியில், அரசு மருத்துவமனை உள்ளது.சுற்றுப் பகுதியிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். பலர், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த அரசு மருத்துவமனை தாழ்வான பகுதியில் உள்ளதால், ஆண்டுதோறும் பருவமழையின் போது, மருத்துவமனையில் மழைநீர் தேங்கி, நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், செய்யூர் சித்தேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், இந்த மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படும்.இந்த மருத்துவமனை ஓரத்தில் செல்லும் வடிகால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்து போய் உள்ளது. இதனால், தண்ணீர் செல்ல வழியின்றி, மருத்துவமனை வளாகத்தில் தேங்குகிறது. இதனால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு ஜன., 12ம் தேதி, அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்து, மருத்துவமனையை சுற்றி உள்ள வடிகால்வாய்களை அளவீடு செய்து அகலப்படுத்தவும், மருத்துவமனையில் வடிகால்வாய் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையால், நேற்று முன்தினம் இரவு, உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தில் மழைநீர் புகுந்து, நோயாளிகள் அவதிப்பட்டனர்.அதன் பின், நோயாளிகள் அனைவரும் அவச சிகிச்சைப் பிரிவு கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடரும் அவதி
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த மருத்துவமனையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், ஆண்டுதோறும் செய்யூர் மருத்துவமனையில் தண்ணீர் தேங்கி, நோயாளிகள் அவதிப்படுவது தொடர்கிறது. துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த ஆண்டு பருவமழைக்கு முன், மருத்துவமனை வளாகத்தில் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.