புதுப்பட்டினம் வணிகர் சங்க தேர்தல் எதிர்கோஷ்டி அடாவடியால் நிறுத்தம்
புதுப்பட்டினம்:கல்பாக்கம் பகுதியினருக்கு, பிரதான வர்த்தக இடமாக, புதுப்பட்டினம் விளங்குகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்புடன் இணைந்த புதுப்பட்டினம் வணிகர் சங்கம், இங்கு இயங்குகிறது. அ.தி.மு.க., பிரமுகர் காதர் உசேன், சங்க தலைவராக உள்ளார்.அவரை எதிர்க்கும் தரப்பினர், தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த வலியுறுத்தினர். இதையடுத்து, தேர்தல் பணிக்குழு ஏற்படுத்தி, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.தற்போதைய தலைவர் காதர் உசேன், முஹம்மது சலாஹுதீன் ஆகியோர் மனு அளித்தனர். சங்க உறுப்பினர்களுக்கு, ஓட்டுச்சீட்டும் வழங்கப்பட்டது.இதற்கிடையே, தேர்தலுக்கு வலியுறுத்தியவர்கள், தேர்தலை புறக்கணித்தனர். புதுப்பட்டினம் அனைத்து வணிகர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, பதாகையும் அமைத்தனர்.இந்நிலையில், எதிர் தரப்பைச் சேர்ந்தவர்கள், நேற்று முன்தினம் கடைகள்தோறும் சென்று, வியாபாரிகள் ஓட்டளிக்க கூடாதென மிரட்டியதாக கூறப்படுகிறது.மேலும், எதிர் தரப்பினர் அழுத்தம் காரணமாக, தேர்தலை கைவிட வேண்டும் என, கல்பாக்கம் போலீசார் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இச்சூழலில், நேற்று காலை 10:30 மணிக்கு, தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கப்பட்டது. பேரமைப்பின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் பார்வையிட்டார். வியாபாரிகள் ஆர்வத்துடன் பங்கேற்று ஓட்டளித்தனர். போலீசார் பாதுகாப்பிற்கு முகாமிட்டனர். தேர்தல் நடைமுறை செயல்பாடுகள், வீடியோ பதிவு செய்யப்பட்டது. ஓட்டுப்பதிவு நடந்தபோது, காலை 11:00 மணிக்கு எதிர் தரப்பைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர், 15க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், பட்டாசு வெடித்து, இருசக்கர வாகனங்களில் பேரமைப்பு கொடியுடன் அணிவகுத்தார்.தேர்தல் நடந்த தனியார் திருமண மண்டபத்தின் முன், வாகன ஒலிபெருக்கியில், ஏற்கனவே சங்க தேர்தல் நடத்தி, தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பின், எதற்காக தேர்தல் என கோஷமிட்டதால், மோதல் சூழல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இருப்பினும், 519 மொத்த ஓட்டுக்களில், 185 ஓட்டுகள் பதிவான நிலையில், தன் ஆதரவாளர்களுடன் சென்று முற்றுகையிட்ட தி.மு.க., பிரமுகர், தேர்தலை நிறுத்துமாறு கூறி, தகராறில் ஈடுபட்டு தேர்தலை நிறுத்தினார்.இது தொடர்பாக, தி.மு.க., பிரமுகருக்கும், பேரமைப்பின் மாவட்ட தலைவர் பிரபாகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் முடக்கப்பட்டது குறித்து, போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.பதிவான ஓட்டுகளில் பெரும்பான்மை பெற்றவரை, தலைவராக அறிவிப்பது குறித்து, மாவட்ட தலைவருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என, தேர்தல் பணிக்குழுவினர் தெரிவித்தனர்.