உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட விளையாட்டு வளாக பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்

மாவட்ட விளையாட்டு வளாக பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு:மலையடி வேண்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும், மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில் விளையாட்டு வளாகம் இல்லாததால் இளைஞர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க வேண்டுமென, அரசிடம் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு மாவட்ட புதிய விளையாட்டு வளாகம் அமைக்க, 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை வருவாய்த்துறையினர், விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கினர். அதன் பின், மாவட்ட விளையாட்டு வளாகம் கட்ட, 15 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியது. இந்த மாவட்ட விளையாட்டு வளாகத்தில் விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஓடுதளம் ஆகியவை அமைகின்றன. இப்பணிகளை மேற்கொள்ள, தனியார் ஒப்பந்ததாரருக்கு 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. கடந்தாண்டு மார்ச் 15ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, இப்பணிகளை துவக்கி வைத்தார். அதன் பின், விளையாட்டு வளாக பகுதியில் சுற்றுச்சுவர், அரங்கம், குளம் கட்டுமானப் பணிகள் துவங்கி, மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடித்து, கடந்த ஜூன் மாதம் விளையாட்டு வளாகம் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். இப்பணிகளை விரைந்து முடிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தாததால், தனியார் ஒப்பந்ததாரர் பணிகளில் மெத்தனமாக செயல்பட்டு வருகிறார். எனவே, மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். செங்கல்பட்டில், புதிதாக, மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். - விளையாட்டுத் துறை அதிகாரி, செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை